Thursday, July 7, 2011

அன்பெனும் பூங்காற்று - 2


அன்பெனும் பூங்காற்று - 2

அருணால் வழங்கப்பட்ட அந்த புகைப்படக் குறிப்பேட்டை பார்த்துக் கொண்டிருந்த மோகனுடைய கண்களில் நீர் பெருக்கெடுத்தது. யார் அந்த அருண்...? அவனுக்கும் மோகனுக்கும் என்ன உறவு...? இப்பூவலகில் பரந்துபட்ட நாடுகளில், வழங்கப்படும் அல்லது வழங்கப்பட்ட மொழிகள் எதில் தேடினாலும் அந்த உறவை விளக்கும் சொற்கள் காணப்படமாட்டா... அந்த உறவை நாம் விரிவாக அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள சுமார் 24 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்க வேண்டும். நாம் இப்போது அதைத்தான் செய்யப்போகிறோம்... வாய் வேகம்... மனோ வேகம் எனச் சொல்லப்படும் வேகத்தில் நாம் இன்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முந்தைய நெறுப்பூரின் மேட்டுத் தெருவிற்குச் செல்வோம்...

நெறும்பூரின் மிகவும் புகழ்பெற்ற மனிதர், சோமசுந்தரம் அவர்கள் தான். அவர்தான் மோகனின் அப்பா. மோகனுக்கு இப்போது 5 வயது. முதல் வகுப்பில் படிக்கிறான். சோமசுந்தரம், மெத்தப் படித்தவர், தொழிலதிபர். அவரது மனைவி, வசுந்தரா, மோகனின் அம்மா, அவரும் மெத்தப் படித்தவர். கணவனின் உளம் அறிந்து நடப்பதில் வல்லவர். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழிலை நடத்தி வந்தனர். மோகன்ராஜ், வீட்டின் ஒரே செல்லப்பிள்ளை. சோமசுந்தரம் வசுந்தரா தம்பதிக்கு வெகுநாட்கள் கழித்து பிறந்த பிள்ளை. பல கோடி சொத்துகளுக்கு ஒரே வாரிசு. ஆனால், நெறுப்பூரில் அவர்கள் இருந்த வீடு, சோமசுந்தரத்தின் முன்னோர் வாழ்ந்த பூர்வீக வீடு. அந்த வீட்டின் அருகில் இருந்த வீடுகளில் எல்லாம் சோமசுந்தரத்தின் உறவினர்கள் இருந்தனர். அவர்களும் மிகவும் பெரிய பணக்காரர்கள் தான்.

5 வயது மோகனின் பிடித்தமான பொழுதுபோக்கு, தன் வீட்டு மதிற்சுவரின் அருகில் அமர்ந்து கொண்டு தெருவில் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்ப்பது. அன்று அவர்களின் எதிர்வீடு அல்லோலகல்லோலப் பட்டது. அங்கு தனது தந்தையின் நண்பரான சிவசுப்ரமணியன் என்ற சிவசு இன்று குடிவருகிறார். மோகனின் தந்தை தான் முன் நின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். வசுந்தரவும் சோமுவும் சிவசுவின் குடும்பத்தினரின் வருகைக்காகக் காத்திருந்தனர். சிவசு, தனது குடும்பத்தினருடன் ஒரு பெரிய வண்டியில் வந்தார். முதலில் சிவசு இறங்கினார். அவர் மிகவும் அமைதியான தோற்றமுடைய நபர். அவருக்குப் பின் மிக அழகு நிறைந்த ஒரு பெண்மனி இறங்கினார். அவர்தான் தெய்வானை, சிவசுவின் மனைவி. அவளுடைய கையில் ஒரு வயதேயான ஒரு குழந்தை. அந்தக் குழந்தையின் முகத்தில் களை சொட்டியது. அது தான் அருண். அவர்களுடைய ஒரே புதல்வன். சோமுவும், வசுந்தராவும் சிவசுவையும், தெய்வானையையும் வரவேற்பதில் திளைத்திருந்தனர். வசுந்தரா, அருணைத் தன் கையில் வாங்கி வைத்துக் கொண்டாள். அருணின், மழலைச் சிரிப்பு அனைவரையும் கவர்ந்திழுத்தது. அவனுடைய ஒளி பொருந்திய கண்களும், கொழு கொழு கன்னங்களும் அவனை அந்த வட்டாரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற குழந்தையாகச் செய்துவிடும் போலிருந்தது.

வசுந்தரா தன் மகனை அழைத்தாள்.
மோகன்... மோகன்... இங்க வா...”, மோகன் ஓடி வந்தான். தன் தாயின் கையில் இருக்கும் குழந்தையைப் பார்த்ததும், மோகனுக்கு மகிழ்ச்சி பொங்கியது.
அம்மா... இந்தப் பாப்பா யாருமா...?” மோகன் கேட்டான்.
இது அந்த அங்கிள் ஆண்ட்டியோட பாப்பா... உன் தம்பி... இவன் பேரு அருண்... உனக்குப் பிடிச்சுருக்கா...?” வசுந்தரா கேட்டாள்.
 ஹை... என் தம்பி பாப்பாவா... எனக்கு பிடிச்சிருக்கு... ஓய் குட்டிப் பையா... வா...வா...வா...மோகன் தன் பிஞ்சுக் கைகளைத் தட்டி குழந்தையை அழைத்தான்.
திடீரென, அருண் பாப்பா இரைச்சலாய் சிரித்தான். மோகனைப் பார்த்ததும் அவனிடத்தில் தாவிக்கொண்டு சென்றான். அனைவருக்கு இது ஒரே வியப்பாய் போய்விட்டது. ஆனால், சிவசுவும், சோமுவும் மிகவும் மகிழ்ந்தனர். தங்கள் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் அண்ணன் தம்பியாய் வளர வேண்டும் என்பது அவர்கள் இருவரின் உள்ளக்கிடக்கையாய் இருந்தது.
சிவசுவின் குடும்பம் நன்றாய் குடியமர்ந்து பழகத் துவங்கியது. அன்றாடம் பள்ளி முடிந்ததும், மோகன், சிவசுவின் வீட்டிற்கு சென்று விடுவான். அருணுடன் விளையாடுவது தான் அவனுடைய பொழுது போக்கு. அருணும் மோகனைப் பார்த்தவுடன் எக்காளமிடுவான்.
மோகன் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவதும், விளையாடுவதும், அவனுடைய மழலை மொழியைக் கேட்டு மகிழ்வதும், அவன் பிஞ்சுக் கரங்களைப் பற்றி மகிழ்வதும் என அருணுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. எப்போதாவது அருண் அழுதால், மோகனுக்குப் பொறுக்காது. உடனே அவன் அழுகை நிறுத்த இவன் குட்டிக்கரணம் அடிப்பதும், கைதட்டி ஒலியெழுப்புவதும் என விளையாட்டுக் காட்டுவான். அவன் அதற்கும் அழுகையை நிறுத்தவில்லை என்றால், இவன் கலவரமாகி விடுவான். தெய்வானையும் வசுந்தராவும் மோகன் குழந்தை மேல் வைத்திருந்த அன்பையும் பாசத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடையாத நாளே இல்லை... அருண் முதல் முதலாய் கால்பதித்து நடந்தபோதும், சிறு சிறு சொற்கள் பேசி அழைத்த போதும், சற்று அறிவுடைமையுடன் செயல்பட்ட போதும், மோகன் அருகில் இருந்து பார்த்து ரசித்தான். அருணுக்கு இரண்டு வயது ஆகும் போது மோகனுடனே எப்போதும் இருப்பான். அன்றாடம் மோகன் பள்ளிக்கு செல்வது கூட அருணை ஏமாற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும். அவ்வாறு அவன் சென்ற பிறகு சுமார் அரை மணி நேரமாவது அருண் அழுது கொண்டே இருப்பான். அவன் அம்மா, வசுந்தரா அத்தை எல்லாரும் சேர்ந்துதான் அவனை அமைதிப்படுத்த இயலும்.

நாளைடைவில், அருணும், மோகனும் ஈருடல் ஓருயிர் என்பதைப் போன்ற இணைபிரியாதவர்கள் ஆனார்கள். மோகனைப் பொறுத்தவரை அருண் அவன் உடன் பிறவா தம்பி. அவனுக்கு எந்த துன்பமும் வராமல் பாதுகாக்க வேண்டிய கடமை இவனுக்கு உண்டு என எப்போதும் எண்ணுவான். அருணைப் பொறுத்த வரை, மோகன் தனக்கு மட்டுமே சொந்தமானவன். வேறு எந்தக் குழந்தையை மோகன் கொஞ்சினாலும் அருணுக்கு கோபம் வரும். அது போல, யாராவது மோகனைத் திட்டினால் அருணுக்குக் கடுமையான கோபம் வரும். மோகனுடன் சேர்ந்துதான் அருண் உணவு உண்பான். மோகன் அருகில் படுத்துக் கொண்டு அவன் மீது கால் போட்டுதான் தூங்குவான். அருண், மோகனின் உள்ளத்தில் எப்போதும் ஒளிவிடும் அன்புச்சுடரானான். மோகன், அருணின் உலகமானான்.
இவர்கள் அன்பு இதுபோலவே இருந்துவிட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும். இன்று மோகன் பட்ட துன்பங்கள் எல்லாம் இல்லாமல் போயிருக்கும். ஆனால், விதி என்ற ஒரு வினைப்பயன் இருக்கிறது. அதன் அதிரடியான ஆட்டங்களுக்கு யாரால் தான் ஈடுகொடுக்க இயலும். அருணின் சிறுவயது முதலே அவன் மிகவும் உணர்ச்சிவயப்படும் ஒரு குழந்தையாக இருந்தான். அதிலும், மோகன் என்று வந்தால், அவன் உணர்ச்சி மிகுதியை யாராலும் கட்டுப்படுத்த இயலாது. மோகனுக்கு அருணைச் சீண்டி விளையாடுவது எப்போதும் பிடிக்கும். அவன் தன் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பையும், உரிமையையும் உறுதி செய்து கொள்வதில் அவனுக்கு எப்போதுமே அலாதி விருப்பம். அதிலும், அவன் தன் மீது உரிமை கொண்டாடுவதைப் பார்க்க பார்க்க மோகனுக்கு மிகவும் இறுமாப்பாக இருக்கும். அவன் உள்ளம், அருணிடத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனிக்கத் தவறிவிட்டது. அது விதியின் விளையாட்டு. வினைப்பயன். அதை யாராலும் மாற்றிவிட முடியாது.

(தொடரும்…)

கருத்துக்களைத் தெரிவிக்க: radharjaesh18@gmail.com

No comments:

Post a Comment