குறிப்பு: இக்கதையின் பாத்திரப் படைப்புகள் யாவும் கற்பனையே. நிகழ்வுகள் சில என் சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடப்படும் நபர்கள் யாவரும் கற்பனை. கதையில் சூடான உடலுறவுக் காட்சிகள் இருக்காது. இரு இளைஞர்களுக்கிடையேயான மெல்லிய காதலைப் பற்றி சொல்லும் கதை.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 7
----------------------------------------------------------------------------------------------------------
அர்ஜூனுக்கு உடல் குளிக்கவேண்டும் போல இருந்தாலும், அவனது பலகீனமான நிலையும், காய்ச்சலடித்த உடல்நிலையும் அவனை அசையாது செய்திருந்தது. அவனுக்குத் தெரியும், இப்போது ஒரே வழி வெந்நீரில் நனைத்த துண்டால் உடல் முழுதும் துடைத்து விடவேண்டும். ஆம்.. அதை ராஜேஷ் தான் இப்போதைக்குச் செய்ய முடியும். இந்த நினைவே அவன் காதல் நோயை மிகுதியாக்கி அவனை வாட்டியது. ராஜேஷின் கைகள் தன் உடல் மீது படுவதை நினைத்த போதே அவன் உடல் முழுதும் சிலிர்த்தது. அவன் ஒரு நொடி கண்களை மூடி தன் மனதைக் கட்டுப்படுத்தினான். கண்ணைத் திறந்து பார்த்த போது, ராஜேஷ் தயங்கியபடியே உள்ளே வந்தான்.
“ம்…ம்.. அர்ஜூன்… டாக்டர் உன் உடம்ப ஈர துண்டால துடச்சு விடச் சொல்றாரு… நான் துடச்சுவிடவா…?” ராஜேஷ் மிக மிக தயங்கியபடியே கேட்டான்.
ப்ளீஸ்… அர்ஜூன்… சரின்னு சொல்லு… நான் உனக்கு செய்யும் இந்த பணிவிடையில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். உன் அழகான அந்த உடம்பில் என் கைகளால் தொடவேண்டும்….
ராஜேஷ் தயங்கியபடியே சொன்னதைப் பார்த்ததும் அர்ஜூனுக்கு சுருக்கென்றது.
இவனுக்கு என் உடம்பை தொட பிடிக்கவில்லை… அதனால் தான் இத்தனை தயக்கம்… டாக்டர் சொன்னதால் செய்ய நினைக்கிறான். ராஜேஷ், நீ என் உடலைத் தீண்டும் அந்த ஒரு இன்பத்திற்காக நான் எத்துணை முறை வேண்டுமானாலும் காய்ச்சலோடு படுக்கத் தயார். ஆனால் உன் முகத்தில் தெரியும் இந்தத் தயக்கம்….
அர்ஜூன் பெருமூச்சு விட்டான்.
“உனக்குப் பிடிக்கலைனா செய்ய வேண்டாம் ராஜேஷ். என்னால உனக்கு நிறைய கஷ்டம்” அர்ஜூன் குரல் தழுதழுத்தது.
ராஜேஷ் கட்டிலில் அர்ஜூனின் அருகில் அமர்ந்தான்.
“அர்ஜூன், உனக்குப் பயித்தியமா…? நீ என் ஃப்ரெண்ட்… இத ஆயிரந் தடவ நான் சொல்லிட்டேன். உனக்குச் செய்ய எனக்குக் கசக்குமா என்ன…? ஒரு நிமிஷத்துல நான் வந்துடறேன்….” ராஜேஷ் அர்ஜூனின் தலையைக் கோதியவாறே சொன்னான்… எழுந்து அருகில் இருந்த குளியலறைக்குள் சென்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் ராஜேஷ் ஒரு சிறிய வாளியில் சுடுநீரும் ஒரு துண்டும் கொண்டு வந்தான். பின்னர் மெதுவாக அர்ஜூனின் அருகில் அமர்ந்து, அவன் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான். அர்ஜூனோ அந்த சொர்க்கத்தின் வாசலில் கால்கள் தள்ளாட, கழிவின்பமெய்தி, இன்பத்தின் சிகரத்தின் மூச்சிறைக்க ஏறினாற் போல உடல் முழுதும் சிலிர்த்து கண்கள் மூடிக் கொள்ளவும் தோன்றி, மூடாமல் திறந்து கொண்டு ராஜேஷின் அழகை அள்ளிப் பருகவும் தோன்றி, இன்ப வேதனையில் திளைத்தான்.
ஒவ்வொரு பொத்தானும் அவிழ்க்கப்பட சட்டை விடை பெற்றது. ராஜேஷ் உதறும் கைகளுடன் அர்ஜூனின் அரைக்கால் சட்டையை (ஷார்ட்ஸ்) அவிழ்த்தான். பின்னர் இருப்பது ஒன்றே ஒன்று.. அது உள்ளாடை… ராஜேஷ் அதையும் அவிழ்க்க நினைத்தான். அவன் கைகளோ அவனை ஏமாற்றியது. அதில் திடீரென வலுவில்லாதது போன்ற ஒரு உணர்ச்சி. ராஜேஷ் வியர்வையின் குளத்தில் தெப்பமாய் மிதந்தான். அவன் இதயமோ ஆயிரம் முறை லட்சம் முறை துடித்தது. அவன் மெதுவாக மிக மெதுவாக அர்ஜூனின் உள்ளாடையை அவிழ்த்தான்.
எல்லாம் விடை பெற்றது. அழகு என்னும் தெய்வம் இப்படித்தான் இருக்கும் போலும்…. அழகின் இலக்கணம் இது தான் போலும்… அழகு என்னும் சொல்லின் பொருள் இவன் தானோ என்னமோ…. அழகின் உச்சம் இந்த சிறிய இளைஞன் தான் நிச்சயம். ராஜேஷின் திறந்திருந்த வாய் மூட பல மணித்துளிகள் ஆனது.
சந்தனப் பலகையில் செய்த தெய்வீகச் சிற்பம் போல அர்ஜூன் சுடர் விட்டுப் பிரகாசித்தான். அவன் ஒவ்வொரு அங்குல உடலும் தங்கச் சுரங்கம் போல ஆயிரம் கோடி சூரியப்பிரகாசமாய் விளங்கியது. ராஜேஷின் கண்கள் அந்த அழகிய உடலை அப்படியே படம் பிடித்தது. அவன் வெந்நீரில் நனைத்த துண்டினால் அர்ஜூனின் உடலைத் துடைத்தான். அவன் முடியில்லா அழகிய மார்பிலும், வயிறிலும், வாழையின் தண்டைப்போன்ற வழுவழுப்பான தொடைகளிலும், கணுக்கால், முழங்கால் எல்லாவற்றிலும், அவன் ஆண்மையின் திறம் காட்டும் மர்மஸ்தானங்களிலும், ராஜேஷின் விரல்கள் பட அந்த வெந்நீர் குளியல் நிறைவேறியது.
அர்ஜூனைப் பற்றி நான் சொல்லவில்லை அல்லவா… அவன் அந்த சொர்க்கதின் உள்ளே சென்று அங்கும் இறந்து சொர்க்கத்தின் சொர்க்கத்திற்கே சென்று விட்டான். அவன் உள்ளம் கவர்ந்த காதலனின் கைகள் பட்ட அவன் உடல் தேவஸ்வரூபம் அடைந்து விட்டது. அந்த ஆண்மை நிறைந்த கைகளில் தன் மென்மையான உடலைத் தந்து விட்டு அவன் உயிர் மட்டும் வெளியில் இருந்து அந்த அற்புதக்காட்சியைக் கண்டது. இது ஒரு உலக அதிசயம். அவர்களுக்குள் ஊறும் காதல் இப்போது வெள்ளமென பெருகியோடி அருவியாகி ஆறாகி கடலில் சங்கமிப்பது போல அவன் உணர்ந்தான்.
ராஜேஷ்… எனை எடுத்துக் கொள்… என் ஆறு புலன்களையும் உனக்குள் நான் அடக்கிவிட்டேன்.. என் கண்கள் திறந்தாலும் மூடினாலும் காட்சியாக நீதான் இருக்கிறாய்… என் நாசியில் நறுமணமாக உன் வாசனைதான்… என் இதழில் உன் மீது பட்ட காற்றின் துளிகளை நான் இழைத்துக் கொண்ட சுவை… என் காதுகளில் உன் மூச்சின் சத்தம்… என் உணர்வுகளில் உன் விரல் தீண்டும் இந்த இன்பம்… என் ஐம்புலனையும் ஆக்கிரமித்துக் கொண்டாயே…. ராஜேஷ்… அப்படியே என்னை எடுத்துக் கொள்… நான் உனக்காக படைக்கப்பட்டவன்….
அர்ஜூன் கண்களைத் திறந்து இந்தப் பூவலகில் மறுபடியும் பிரவேசித்த போது அவன் புது உடைகளை அணிந்திருந்தான். ராஜேஷை அங்குக் காணவில்லை…
எப்படி இருப்பான். அவன் அடுத்துள்ள அறையில் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். தன் கைகளைப் பிசைந்து, தலை மயிர்களைப் பிய்த்து, பல்லைக் கடித்து, அர்ஜூனை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொங்கும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். பற்களால் உதடுகளைக் கடித்து தன் நாவையும் கடித்து அவை அர்ஜூன் உடலில் உரச வேண்டும் என நினைப்பதைக் கட்டுப்படுத்தினான். கைகளை இறுகக் கட்டிக்கொண்டு அவை அர்ஜூனைச் சிறைப்படுத்த நினைப்பதைக் கட்டுப்படுத்தினான். மார்பினில் மூச்சை நிறுத்தி அது அர்ஜூனை தன்னோடு அணைத்துக் கொள்ள நினைப்பதைக் கட்டுப்படுத்தினான். உடலின் ஒவ்வொரு அங்கமும் அவனை மீறி அர்ஜூன் மீது சென்றது. அர்ஜூன்… அர்ஜூன்… அர்ஜூன்… என அவன் எண்ணம் கூட அவனை ஏமாற்றிவிட்டு அர்ஜூன் பல்லவி பாடியது. இனியும் போதும் இந்தக் கட்டுப்பாடுகள். அவனால் இயலவில்லை… பொறுத்தது போதும்… அர்ஜூனிடத்தில் தன் காதலை இக்கணமே சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்தான் ராஜேஷ்… உடனே அவன் உடல் பூரித்தது. மெல்ல எழுந்து அர்ஜூன் இருக்கும் அறை நோக்கி நடக்கலானான்…
காதலைச் சொல்ல என் கழுத்துவரை
வார்த்தை வந்தும்
பேதையென் வாய்க்கு மட்டும்
பேரச்சம் உருவாக
ஆதலால் அமைதியாய் இருந்துவிட்டேன்.
சொல்லத்தான் இல்லையன்றி,
என் உயிர்க்கூட்டின் வாயிலில்
மெல்லத்தான் நீ நுழைந்து என்
உள்ளத்து அரண்மனையில் அமர்ந்துவிட்ட திறனை
கள்ளம் செய்தெந்தன் காதலைப் பெருக்கிவிட்ட பேரறிவை
சொல்லவும் முடியாமல் உன் காதலை
மெல்லவும் முடியாமல்
உள்ளம் தவிக்கிறேன்
என் அன்பே
என் உயிர் வரை வலிக்கிறேன்.
காதலெனும் கடைவழியில்
நடைபிணம் போல் வாழ
நானென்ன பாவம் செய்தேன்
உன்னைக் காதலித்ததை அன்றி…
(தொடரும்)…..
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 8
----------------------------------------------------------------------------------------------------------
நாம் யாரையாவது காதலிக்கும் போது, அதுவும் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கும் நாம் அன்றாடம் பார்க்கும், பழகும் நபராக இருக்கும் போது, அவர்கள் நம்மைக் காதலிப்பார்களோ மாட்டார்களோ என அஞ்சும் போது, நமது காதல் தான் நம்முடைய துன்பமாக மாறிவிடும். அது நமது நெஞ்சை அழுத்திக் கொண்டு, நீடித்த வலியாக மாறி அதை வெளியிடும் வரை நிம்மதி இழக்கச் செய்துவிடும். அதுபோன்றதொரு நிலையை ராஜேஷ் அடைந்திருந்தான். இனியும் மறைக்க இயலாது என்ற ஒரு நிலை வந்து அவனுக்கு வேகத்தைக் கொடுத்ததால் தான் அவன் உடனே புறப்பட்டான்.
ஆனால், ஒவ்வொரு அடி அவன் அர்ஜூன் அறையை நோக்கி எடுத்து வைக்கும் போதும், அவன் வேகம் படிப்படியாகக் குறைந்தது. இறுதியில் அவன் அர்ஜூன் முன் சென்று நிற்கும் போது அவனுக்கு பயம் மட்டுமே எஞ்சியது. ஒருவேளை இவன் நம்மைப் புறக்கணித்தால், இவனருகில் இருந்து கொண்டு இவனோடு வாழும், இவனை அன்றாடம் காணும் இந்த இன்பம் கூட கிடைக்காமல் போய்விட்டால்…. ராஜேஷின் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.
அர்ஜூன் ராஜேஷைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை புரிந்தான். அவ்வளவுதான், கொஞ்சம் நஞ்சம் இருந்த அந்த வேகமும் குறைந்து விட்டது. ராஜேஷ் இந்தப் புன்னகையை இழக்க விரும்பவில்லை. அர்ஜூன் தன்னைக் காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவனருகில் இல்லாமல் இருப்பதுதான் பெரிய கொடுமை… அதனால் அமைதி காக்க முடிவு செய்தான்.
அன்றொருநாள் அவர்கள் இருவரும் மனக் குழப்பங்களோடு போராடி இரவின் மடியில் தூக்கத்தைத் தேடி அருகருகே படுத்து அமைதியின்றி உறங்கினர். மறுநாள் அர்ஜூன் முழுவதும் நலமாயிருந்தான். உடலில் சற்று தெம்பு வந்திருந்தது. ஆனாலும் அலுவலகம் செல்லும் அளவிற்கு தெம்பு வரவில்லை. ராஜேஷை மட்டும் வற்புறுத்தி அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டான் அர்ஜூன்.
ராஜேஷும் அர்ஜூனின் வற்புறுத்தலுக்காக அலுவலகம் சென்றான். அவன் உள்ளம் இங்கே ராஜேஷின் படுக்கையறையில் அவன் அருகில் தான் இருந்தது. அவன் உடல் மட்டும் அலுவலகம் சென்றது. அவன் பணி எதுவும் அன்று ஒழுங்காய் நடக்கவில்லை. காலையில் இருசக்கர வாகனத்தை பல இடங்களில் பலர் மீது மோதுவது போலச் சென்றான். பணியிலும் பல தவறுகள். ராஜேஷின் மனமோ அர்ஜூன் மீதே இருந்தது. அவன் அன்று மாலை கிளம்பி நேரே தன் வீட்டிற்குச் சென்று தன்னறையில் நுழைந்து கதவுகளைச் சாத்தி தாளிட்டான்.
அவனுக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டி இருந்தது. ஆம்… அவன் அர்ஜூனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவனை வாட்டும் அந்த ஏக்கத்தை அவன் போக்க வேண்டும். ஓரளவு குறைக்கவாவது வேண்டும். அவன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். இனியும் அர்ஜூனுடன் இருக்கும் நேரங்களில் அமைதியாய் இருக்க முடிவு செய்தான். அவனுடன் ஆழ்ந்த நட்பு கொள்ள முடிவு செய்தான். அவனைத் தன் காதலானாகப் பார்க்கும் எண்ணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அர்ஜூன் இதற்கு ஒத்துக் கொள்வானா எனத் தெரியாமலேயே அவன் மீது மேலும் மேலும் காதல் வளர்ப்பது பேராபத்தை விளைவிக்கும் என ராஜேஷ் பயந்தான்.
அவன் சற்று தெளிவான மனநிலையுடன் அர்ஜூன் வீட்டை நோக்கி நடந்தான். அர்ஜூனைக் கண்டதும் அவன் மீண்டும் பழைய நிலையை அடைந்தான். அவனால் அவ்வளவு எளிதாக இதை செய்ய இயலாது என புரிந்தது. இருந்தாலும் செய்ய வேண்டும்.
அடுத்து வந்த நாட்கள் அவர்கள் இருவருக்குமே இன்பமான நாட்கள். அவர்கள் பெரும்பாலும் ஒன்றாகவே பொழுதைக் கழித்தார்கள். ராஜேஷ் அர்ஜூனை அழைத்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றினான். தன் நண்பர்கள் அனைவருக்கும் அர்ஜூனையும் அறிமுகம் செய்து வைத்தான். எல்லாருமே அர்ஜூனும் ராஜேஷும் இணைபிரியா நண்பர்கள் என நம்பினர். அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பு போல் எந்த நண்பர்களும் இருந்ததில்லை என பேசிக்கொண்டனர்.
ராஜேஷின் மன வலிகள் எல்லாம் அவன் டைரிக் குறிப்புப் பக்கங்களை நிறைத்தன. அர்ஜூனோ அவன் தலையணையை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் எதுவரை இப்படியே தொடர்வது என தெரியாமல் தொடர்ந்தனர்.
நாட்கள் மிக வேகமாக ஓடி மாதங்கள் கடந்தன. காதல் விதையினின்று வரும் வேர்ச்செடியாகி, தழைத்தோங்கி வளர்ந்து கிளை பரப்பி, நிழல் விரிந்த நெடுமரமாய் வளர்ந்து நின்றது. மழைக்காலத்தின் துவக்கம் அது.
மழைக்காலம். காதலர்களுக்கு கனவுகள் பூக்கும் காலம். காதல் நோயால் பிணிக்கப்பட்டவர்களுக்கு கனவுகள் துன்புறுத்தும் காலம். பிரிவெனும் பெருநோய் வந்து வாட்டும் காலம். அர்ஜூனும் ராஜேஷும் தன் வெறும் படுக்கைகளை நேசிக்க மறந்து தனிமையில் தவித்து காதல் நோய் முற்றிப் போய் அவதிப்பட்டனர். இருவரும் ஒருவரையொருவர் காணத்தவித்தும் காதல் கொள்ளத்தவித்தும்…. அடடா…. இரக்கம் காட்டுங்கள் இவர்கள் மேல்.
அன்று சாரல் மழை பொழிந்திருந்த நேரம், ராஜேஷ் அர்ஜூனை அழைத்துக் கொண்டு கொஞ்சம் மழையில் நனைய விரும்பினான். தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அர்ஜூன் வீட்டிற்குச் சென்றான்.
“அர்ஜூன், வாடா கொஞ்சம் மழயில நனஞ்சிட்டு வருவோம்… என் வண்டிலயே போலாம்” ராஜேஷ் கேட்க, அர்ஜூன் சம்மதித்தான். விதியின் விளையாட்டை யார்தான் மாற்ற முடியும். இரவு 7 ஆனது, அவர்கள் இருவரும் சென்னையின் பிரதான சாலைகளைச் சுற்றிவிட்டு கூடுவாஞ்சேரி நோக்கி வந்த போது இரவு 11 மணி.
அர்ஜூன் ராஜேஷ் பின்புறம் நெருங்கி அமர்ந்திருந்தான். மழைச் சாரல் மெலிதாகப் போட்டது. ராஜேஷின் உடலைக் கட்டிக் கொண்டால் ஒருவேளை இதமாக வெதுவெதுப்பாக இருக்கக்கூடும். ஆனால் அவன் என்ன நினைப்பானோ…
ராஜேஷுக்கோ அர்ஜூன் தன்னை அணைத்துக் கொள்ள மாட்டானா என்ற ஆசை… அவன் ஒரு நிமிடம் தன்னை அர்ஜூன் அணைத்துக் கொள்வது போல கற்பனை செய்து பார்த்தான். என்ன சுகம்…. அவன் தன்னை மறந்து ஒரு நொடி கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தான். கண்களைத் திறந்து பார்த்தபோது ஒரு மாபெரும் ஒளி வெள்ளம்.
ஏதோ ஒரு பெரிய வாகனத்தின் ஒளிதான் அது. ராஜேஷ் என்ன நடக்கிறது என கவனிப்பதற்குள் ஒரு பெரிய லாரி அவன் வாகனத்தின் முன் பக்கத்தில் மோதியது… வெளிச்சம் எங்கும் வெளிச்சம்… சத்தம் எங்கும் சத்தம்… திடீரென இருட்டு எங்கும் பேரிருள். அமைதி எங்கும் பேரமைதி. மழை மட்டும் சொட்டு சொட்டாய் அங்கே இரு கிடந்த இரு உடல்கள் மீது தூறிக்கொண்டே இருந்தது. அந்த இரு உடல்களில் ஒன்றில் கட்டாயம் உயிர் இருந்தது. மற்றொன்றில்…..
என் அன்பே…!
நீ ஏன் என்னை விட்டு விலகிச் செல்கிறாய்
இந்த உலகம் இயங்கும் வரை நான்
உன்னுடனே இருப்பேன் என நினைத்தேனே
நான் முட்டாள்…
இந்த உயிர்கள் உள்ள வரை நிலைக்குமாறு
நாம் காதல் செய்வோம் என நினைத்தேனே
நான் முட்டாள்….
நீ எங்கு செல்கிறாய் என்னை விட்டு,
நான் வர இயலாத அந்த வான வெளிக்கா….?
நான் உன்னைக் கண்டறிய முடியாத ஓரிடத்திற்கா?
என் கைகளில் வலு இருந்தால் நான் உன்னைத் தடுப்பேன்.
என் நெஞ்சினில் உரம் இருந்தால் நான் உன்னைத் தாங்குவேன்
என் இதயத்தில் ஆற்றல் இருந்தால்
உன் பிரிவைப் பொறுப்பேன்…
இல்லையெனில் நானும் உன்னைத் தொடர்ந்து
அந்த உன்னத நிலைக்கு வந்துவிடுவேன்
அங்கு நம்மைப் பிரிப்பாரில்லை….
காதலை முறிப்பாரில்லை
நம்மை மறிப்பாரில்லை
அதுவே நமது துன்பங்களின் எல்லை….
(தொடரும்)…..
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.