குறிப்பு: இக்கதையின் பாத்திரப் படைப்புகள் யாவும் கற்பனையே. நிகழ்வுகள் சில என் சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் குறிப்பிடப்படும் நபர்கள் யாவரும் கற்பனை. கதையில் சூடான உடலுறவுக் காட்சிகள் இருக்காது. இரு இளைஞர்களுக்கிடையேயான மெல்லிய காதலைப் பற்றி சொல்லும் கதை.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 5
----------------------------------------------------------------------------------------------------------
ராஜேஷ் வீட்டுக்குச் சென்றவுடன் யாருடனும் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று விட்டான். அவன் அறைக்குள் அவன் தனிமனிதன். தன் இன்பதுன்பங்கள், விருப்பு வெறுப்புகள், கோபதாபங்கள், காதல், இனிமை, சோகம், பயம் என அனைத்தும் அவனை ஆட்கொள்ளும் ஒரு தனிஉலகம். இந்த ஒரு வாரத்தில் அவனை ஆட்கொண்ட மற்றொரு விஷயம் அர்ஜூனின் நினைவுகள். தன் அறையின் கட்டிலில் படுத்துக் கொண்டு அர்ஜூனைப் பற்றி சிந்தையைச் செலுத்துவதிலேயே தன் நேரம் முழுதையும் செலவிட்டான் ராஜேஷ். அவன் வழக்கமான நண்பர்கள் சந்திப்புகள் அனைத்தையும் தள்ளிவிட்டு தனிமையில் அர்ஜூனின் நினைவுகளோடு காலம் கழத்தான். இது போன்ற சமயங்கள் அவன் வாழ்க்கையின் இன்பமான காலங்கள்.
தன் மொபைல் போனை எடுத்து “ஹாய்… டியர்… என்ன பண்ற?.” என தட்டி தகவலை அர்ஜூனுக்கு அனுப்பினான்… உடனே “சாப்டாச்சா?” என்ற தகவலையும் அவனுக்கு அனுப்பினான். வெகுநேரம் விடைக்காகக் காத்திருந்தான். ”ஆமா… இப்பதான் சாப்பிட்டேன்… இன்னைக்கு முழுக்க என்னோட இருந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்…” அர்ஜூனின் பதில் கிடைத்தது.
“நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்… நமக்குள்ள தாங்க்ஸ்… சாரி என்கிற வார்த்தைகள் இல்லை…” ராஜேஷ் அனுப்பினான்.
அர்ஜூன் அந்த்த் தகவலைப் படித்த்தும் அதில் வரும் “நாம்” என்கிற வார்த்தையை மிகவும் ரசித்தான்.
“அது சரி… ராஜேஷ்… நீ என்ன பண்ற…?” அர்ஜூன் கேட்டான்…
“நான் உன்னைப் பத்தி நினைச்சுக்கிட்டிருந்தேன்….” ராஜேஷ் சொன்னான்.
அர்ஜூன் உடம்பில் ஒரு சிலிர்ப்பு…. தன் மேனியைத் தழுவும் சில்லென்ற காற்றில் ராஜேஷின் கைகள் தீண்டுவதாக எண்ணினான். தன் எண்ண அலைகளை அவனும் பெற்றதாக நம்பினான்.
“நானும் கூட உன்னைத்தான் நினைச்சுக்கிட்டிருந்தேன்…. மெஸேஜ் வந்த்தையே கவனிக்காத் அளவிற்கு….” அர்ஜூன் ரிப்ளை.
ராஜேஷின் இதயம் இப்போது இரட்டிப்பு வேகத்தில் துடித்தது… மேலும் பல விஷயங்களைக் கேட்ட வேண்டும்… சொல்ல வேண்டும்… என்று அவன் மனம் துடித்த்து. ஆயினும் இப்போதைக்கு அவனால் அதற்கு மேல் பேச இயலாது.
“சர் அர்ஜூன்… உனக்குத் தூக்கம் வரும்.. நாளைக்கு வேற ஆஃபீஸ் போகணும்… நீ தூங்கு….” ராஜேஷ் அனுப்பினான்.
அர்ஜூன், இரவு முழுக்க உன்னோடு பேசிக்கொண்டிருக வேண்டும். இந்த உலகில் நீயும் நானும் மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். என் மார்பின் மீது உனைச் சாய்த்து நான் உன்னோடே பல கதைகள் பேசி இந்த இரவு எவ்வளவு இனிமையாய் மாறும்….
ராஜேஷ் பெருமூச்சுவிட்டான்.
“சரி ராஜேஷ், நீயும் தூங்கு… குட் நைட்” அர்ஜூன் அனுப்பினான்.
ராஜேஷ், உனக்குத்தெரியாது என் இரவுகள் உறக்கங்களை உதறி பல நாட்கள் ஆகிறது. நான் தனிமையில் இங்கு பயத்துடன் எவ்வாறு உறங்குவது. நீ எனக்குப் பாதுகாப்பாய் என்னருகில் இருப்பதாய் ஒருவார்த்தை சொல்… நான் உன் மார்பில் முகம் புதைத்து உன் வாசம் பிடித்து என் சுவாசம் எல்லாம் நீயாக மாறி உறங்க ஆசை…
அர்ஜூன் கண்கள் கண்ணீரின் குளமாய் மாறி அவன் தலையணையை நனைத்தன. அவன் மனம் ராஜேஷ் எனும் பேரை ஆயிரம் முறை அசை போட்டது. அவன் உதடுகள் அதையே முனுமுனுத்தது. அவனுக்கு உறக்கம் வரவில்லை… தன் நெற்றியில் ராஜேஷ் முத்தமிட்ட இடம் இப்போதும் அனலாய் கொத்தித்தது அவனுக்கு. அர்ஜூன் அறிந்திருக்கவில்லை…. கடுமையான தாபஜ்ஜூரம் அவனை பீடிக்கப்போவதை. மறுநாள் அதிகாலை அவன் பாட்டி 4 நாள் பயணமாக ஊருக்கு போகிறாள்…
அர்ஜூனுக்கு இரவின் பிடி இறுக இறுக, ஜூரத்தின் வேகம் அதிகரித்தது. அவன் உறக்கத்தை மீறிய மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டான். ராஜேஷுக்கோ இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. அவன் மனம் ஒரு நிலையில் இல்லாது தள்ளாடியது. எங்கோ தனக்கு வேண்டப்பட்ட ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக அவன் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் உறக்கம் கொள்ளாமல் எழுந்து அமர்ந்து கொண்டான். இரவு விடிந்து கொண்டிருந்த அதிகாலை வேலை அது.
அர்ஜூனுக்கு முழுமையாக நினைவு தப்பிவிட்டது. அவனுக்கு ஜூரம் 102 டிகிரிகளைத் தாண்டிவிட்டது. அவன் கேட்கவோ உதவவோ ஆளின்றி அந்த வீட்டில் தனியே இருந்தான். அவன் பாட்டி இதையெதையும் அறியாமல் தான் திட்டமிட்டபடி இரவே ஊருக்குச் சென்றுவிட்டாள். அவன் அநாதையாக ஆதரவின்றி அங்கு கிடந்தான்.
மறுநாள் காலை மணி 5 ஆனதும், ராஜேஷ் ஜாக்கிங் செய்ய கிளம்பினான். அர்ஜூன் வீட்டின் முன் வந்து சில நிமிடங்கள் காத்திருந்தான். அவன் வரவில்லை. ஒரு வேளை தூங்கிப் போயிருப்பான்… அப்புறம் போன் செய்யலாம் அல்லது மாலை வந்து பார்க்கலாம் என நினைத்து அவன் சென்று விட்டான். இருந்தாலும் அன்று காலை அர்ஜூனைக் காணாதது அவனுக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது.
முற்பகலிலும், பகல் உணவு இடைவேளையின் போதும் அவன் செய்த தொலைபேசி அழைப்புகள் பதிலளிக்கப்படவில்லை.
ஒருவேளை மிகவும் பிசியாக இருப்பான்
ராஜேஷ் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். எந்தவொரு அழைப்பு வந்தாலும், தகவல் வந்தாலும் அது அர்ஜூனாக இருக்குமோ என எண்ணி அவன் ஏமாந்தான். அவனது பரபரப்பை அவனுடன் வேலை செய்யும் நண்பர்கள் கேலி செய்தனர். ஆனாலும் யாருக்கும் ராஜேஷின் மனப்போராட்டம் புரியவில்லை. அர்ஜூனுக்கு ஏதோ ஆகிவிட்டதாக ராஜேஷ் உறுதியாக நம்பினான். தான் முந்தினம் இரவு சரியாக உறங்கமுடியாமல் தவித்தது இதனால் தான் என நம்பினான்.
மாலை 4 மணி ஆனதும் அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே கிளம்பி, நேராக அர்ஜூன் வீட்டுக்குச் சென்றான். அழைப்பு மணியை அழுத்தினான். பதிலில்லை. அருகிலே பார்த்தபோது அர்ஜூனின் இருசக்கர வண்டி அங்குதான் நின்று கொண்டிருந்த்து. அர்ஜூனின் ஷூ கூட அங்கு இருந்தது. அப்படியானால் அர்ஜூன் வீட்டிற்குள்தான் இருக்கிறான். இந்த நினைவே ராஜேஷுக்கு கலவரத்தை உண்டாக்கியது.
அர்ஜூனுக்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பயம் அவனைப் பிடித்தாட்டியது. அவனுக்கு சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்த்து. அதாவது முன் தினம் அர்ஜூனும் அவனும் பேசிக்கொண்டிருந்தபோது தன் வீட்டின் முன்கதவுச் சாவி ஒன்று எப்போது ஒரு பூந்தொட்டிக்கு அடியில் இருக்கும் என்றும், அது தனக்கும் தன் பாட்டிக்கும் மட்டுமே தெரியும் என்றும் அர்ஜூன் சொல்லியிருந்தான்.
ராஜேஷ் நேரே அர்ஜூன் சொன்ன பூந்தொட்டியின் அடியில் சென்று பார்த்தான். நல்ல வேளையாக அங்கு ஒரு சாவி, அர்ஜூன் சொன்னாற் போல இருந்தது.
வீட்டின் முன் கதவை ராஜேஷ் திறந்தான். நாலு கால் பாய்ச்சலில் படிகளை ஏறினான். அவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அர்ஜூனின் படுக்கையறையை அடைந்தான். கதவின் பிடிகளில் கைவைத்துத் தள்ள கதவு திறந்து கொண்டது. அங்கு அவன் கண்ட காட்சி அவன் 21 ஆண்டு வாழ்க்கையில் அவன் என்றும் அறிந்திராத ஒரு அதிர்ச்சியில் அவனை உறையச் செய்தது….
என் அன்பே…!
என்னை இங்கே தவிக்க விட்டு
எங்கோ சென்று விட்டாய் நீ….
என் இன்பங்கள் எல்லாம் உன் சட்டைப்பையில்
அதையாவது தந்துவிட்டுப்போ அல்லது
என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்
நீ அந்த எரிமலையில் குழம்பில் எறிந்தாலும்
நான் உன்கையால் மடிவதாய் எண்ணி
மகிழ்ந்துவிட்டுப் போகிறேன்…!
(தொடரும்)…..
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 6
----------------------------------------------------------------------------------------------------------
நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, நம் மீது அன்பு கொண்டவர்களுக்கு, நாம் அன்பு கொண்டிருப்பவர்களுக்கு ஏதேனும் துன்பம் வரும் போது நம் மனமும் பாடாய்ப் படும். அதிலும் அவர்கள் அங்கு பிணியில் பிடியில் படுத்திருக்கையில், நாம் நிம்மதியாக ஒரு வாய்ச் சாப்பாடு கூட சாப்பிட முடியாது. ராஜேஷும் கூட அப்படிப்பட்ட மனநிலையில் தான் இருந்தான். அர்ஜூனுக்கு ஒன்றும் பெரிதாக இல்லை என டாக்டர் எவ்வளவு தான் சொன்னாலும், அவனால் ஒரு பிடி உணவு கூட சாப்பிடமுடியவில்லை.
அர்ஜூன் ஜூரத்தில் நினைவிழந்து படுத்திருந்ததை ராஜேஷ் கண்டதும், அதிர்ச்சி அடைந்தான். உடனே தனக்குத் தெரிந்த டாக்டர் கவுதமை ஃபோனில் தொடர்பு கொண்டு வரச் செய்தான்.
“ஒன்னும் பெருசா இல்ல ராஜேஷ்… அதிகமான ஜூரத்தால சின்ன மயக்கம்.. கூட, இவரு காலைல இருந்து ஏதும் சாப்பிடாம இருக்காரு. அதனால பிரஷர் லோ வா இருக்கு” கவுதம் ஆறுதலாய்ச் சொன்னான்.
அவனை வழியனுப்பி விட்டு ராஜேஷ் அர்ஜூன் அருகிலேயே இருந்தான். தான் இன்று வீட்டுக்குப் போவதில்லை என முடிவு செய்தான். அர்ஜூனின் பாட்டி நான்கு நாட்கள் ஊருக்கு போகப்போவதைப் பற்றி ஏற்கனவே அர்ஜூன் இவனிடம் கூறியிருந்தான். அதனால் தானே அருகில் இருந்து அர்ஜூனுக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும் என முடிவு செய்தான்.
கவுதம் வந்து சென்ற இரண்டு மணிநேரம் கழித்து அர்ஜூன் நல்ல நினைவில் இருந்தான். ராஜேஷ் வந்து செய்த உதவிகளை அவன் வெகுவாக நன்றியுடன் நினைத்தான்.
“ராஜேஷ்… நீ வரலைணா நான் இன்னேரம் என்ன ஆகியிருப்பேனோ தெரியாது…” அர்ஜூன் கண்ணீருடன் சொன்னான்.
ராஜேஷ் தன் கைகளால் அர்ஜூனின் கண்ணீரைத் துடைத்தான். ஒரு சிறு புன்னகை மட்டுமே புரிந்தான். பின்னர் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து, சுவரின் ஓராமாக நின்று கொண்டு பொலபொலவென கண்ணீர் விட்டான்.
அர்ஜூன்…. நீ இல்லைனா எனக்கு வாழ்க்கையே சூனியமாயிடும். உனக்கு ஒன்னும் ஆக நான் விடமாட்டேன்… இப்ப கூட உனக்குத் தெரியாது நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு… நீ உடம்பு சரியில்லாம படுத்திருக்கிறத பாக்க பாக்க எனக்கு நெஞ்செல்லாம் வலிக்குது அர்ஜூன்…
ராஜேஷ் வெளியே சென்றதும், அர்ஜூனின் கண்கள் மேலும் அதிகமாக கண்ணீரை சொரிந்தன.
ராஜேஷ்… நான் எப்படிச் சொல்வேன்… நீ இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு…. இன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லாம நான் மயக்கத்துல இருக்கும் போது, நீ வந்து என்ன காப்பாத்த மாட்டியானு எனக்கு மனசு அடிச்சுகிட்டது.. என் கண்ண திறந்து உன்ன பாத்த அந்த நொடியே என் நோயெல்லாம் பறந்திடுச்சி…. ஐ லவ் யூ சோ மச் ராஜேஷ்…
இருவரும் ஒருவருக்கொருவர் கேட்கா வண்ணம் தங்கள் மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டனர். இரவு துவங்கியது. ராஜேஷ், அர்ஜூனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்தான்…
“ராஜேஷ்… இன்னைக்கு ராத்திரி இங்க என் பக்கத்துல படுத்துக்க… நீ இங்கயே இருந்தின்னா எனக்கு தைரியமா இருக்கும்… ஆனா நான் உன்ன கட்டாயப் படுத்தல….” அர்ஜூன் கெஞ்சலாகக் கேட்டான். ராஜேஷ் வேண்டாமெனச் சொல்லிவிடுவானோ என அவன் மனம் பயந்தது… வலித்தது…
“அர்ஜூன்…. நீ என்ன போன்னு சொன்னாலும் நான் போக மாட்டேன். உனக்கு உடம்பு நல்லா குணமானா தான் எனக்கும் நிம்மதியா இருக்கும். நான் நேத்தே சொன்னேன். நான் உன் ஃப்ரெண்ட். உனக்கு ஒன்னுன்னா நான் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்.” ராஜேஷ் சொன்னான்.
அர்ஜூனின் கண்கள் கண்ணீர் திரையிட்டன. மாத்திரைகளின் சக்தி அவன் இமைகளை இழுத்தது. அவன் உறங்கிப் போனான். ராஜேஷோ உறக்கத்தை தொலைத்தான். அவன் அர்ஜூனின் அருகிலேயே இருந்துகொண்டு அவன் உறங்கும் அழகை ரசித்தான். ஒரு சிறு குழந்தையைப் போல, ஒரு குட்டி தேவதையைப் போல, ஒரு அழகிய இளவரசனைப் போல அர்ஜூன் உறங்குவதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என ராஜேஷின் மனம் ஏங்கியது. அவனுக்கு உறக்கம் வரவில்லை. வெகுநேரம் அவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அர்ஜூன்… நீ எனக்கு கிடைப்பாயா…? நான் இதுவரை வாழ்நாளில் எதற்காகவும் இவ்வளவு ஏங்கியதில்லை…. நீ எனக்கு வேண்டும் அர்ஜூன்… நான் சாகும் வரை என்னருகில் நீ எனக்கு வேண்டும்… உன் அழகிய முகத்தைப் பார்த்துக் கொண்டே நான் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உணவும் உறக்கமும் இன்றிக் கிடப்பேன்…
இரவின் பிற்பகுதியில் ராஜேஷ் எப்போதோ உறங்கிப் போனான். விடியும் வேளையில், அர்ஜூன் உறக்கம் கலைந்து கண்கள் திறந்தான். தனக்கு உடம்பு சரியில்லாமல் படுத்திருந்தது நினைவுக்கு வந்தது. அவன் அருகில் ராஜேஷ் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் உறங்கும் அழகை அர்ஜூன் ரசித்தான். சீராக மூச்சுவிடும் ராஜேஷின் மார்பு அழகாக ஏறி இறங்கியதைக் கண்டதும் அந்த மார்பில் முகம் பதித்து தானும் உறங்க வேண்டும் என்ற எண்ணம் அர்ஜூனுக்கு எழுந்தது. தீராத ஆசையும் எழுந்தது.
ராஜேஷ் ஒரு கையால் ஒரு தலையணையை அணைத்தவாறு படுத்திருந்தான். அந்தத் தலையணையின் மீது அர்ஜூனுக்கு பொறாமையாக இருந்தது. அந்த்த் தலையணைக்குப் பதிலாக அவன் தன்னை அணைத்துக் கொண்டு உறங்கியிருக்கக்கூடாதா என்ற ஏக்கம் பிறந்தது. அர்ஜூன் பெருமூச்சு விட்டான். தன் உள்ளம் கவர்ந்த ஆண் மகன் தன் அருகிலேயே படுத்திருக்க அவனோ தன் கைகளை அசைக்கக்கூட தெம்பின்றி படுத்திருந்தான்.
ராஜேஷ் மெல்ல கண்விழித்தான். அர்ஜூனின் அழகிய மருண்ட விழிகள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது.
சேச்சே… அப்படியெல்லாம் இல்லை. எனக்கு எல்லாமே பிரமை… அவன் ஜூரத்தில் எங்கோ பார்த்தபடி இருக்கிறான்… அவன் ஏன் என்னைப் பார்க்கப் போகிறான்…?
ராஜேஷ் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். அர்ஜூனின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். ஜூரம் துளியும் இல்லை. ஆனால் அர்ஜூன் மிகவும் பலவீனமாக இருப்பதைக் கண்டான். அர்ஜூனால் எழுந்து அமரக் கூட இயலவில்லை. ராஜேஷ் அர்ஜூனின் இடுப்பைப் பிடித்து மென்மையாகத் தூக்கி அவனை அமரச் செய்தான். இருவருமே காதல் நோயால் தவித்தார்கள்…
தன்னை அப்படியே தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள மாட்டானா என அர்ஜூனின் மனமும், அவனை அப்படியே தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ராஜேஷின் மனமும் தவியாய்த் தவித்தது.
மனங்கள் பேசின. மௌனங்களும் பேசின. ஆனால் அவர்கள் தான் வாய் திறந்து பேசவில்லை. அடுத்ததாக ஒரு சிறு பிரச்சினை. அர்ஜூன் குளிப்பதா அல்லது வேண்டாமா என்று. அர்ஜூனுக்கு உடல் பிசுபிசுவென இருப்பதாகத் தோன்றியது. ஆனால் எழுந்து குளிக்கச் செல்லும் அளவிற்கு உடல் வலிமை இல்லை.
ராஜேஷ் டாக்டர் கவுதமை ஃபோனில் தொடர்பு கொண்டு அதுபற்றி கேட்டான்.
”ராஜேஷ்… முடியும்னா அர்ஜூனுக்கு சுடு நீரில் நனைத்த டவலால் உடல் முழுதும் துடைத்து விடுங்கள்… அவர் குளிப்பது அவ்வளவு உசிதமல்ல…” டாக்டர் எளிதாகச் சொல்லிவிட்டார்.
தான் அர்ஜூன் உடம்பைத் தொட்டு ஈர துண்டால் துடைத்து விடுவதா…?... நினைத்தாலே ராஜேஷின் உடல் சிலிர்த்தது. இதற்கு அர்ஜூன் ஒத்துக் கொள்வானா…..? ராஜேஷின் இதயம் படபடவென துடிக்கத் துவங்கியது.
நீ நீரில் நனைந்திருந்தாய்
என் நெஞ்சமோ காதலில் நனைந்திருந்தது
உன் உடலில் உருண்டோடும் அந்த
நீர்த் துளிகளை
என் உதடுகளால் உறிஞ்சிக் கொள்ள வேண்டும்
என் அன்பே…!
என் ஏழேழ் பிறப்பிற்கும்
என் தாகம் தீரும்
உன் மார்பில் உருண்டோடும் அந்த
வைர நீர்த்துளிகள்
உன் இதழில் உருளும் அந்த
தேன் மழைத்துளிகள்
எல்லாம் எனக்குத்தான் சொந்தம்
என் அன்பே…!
நீயும் எனக்குத்தான் சொந்தம்.
(தொடரும்)…..
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
No comments:
Post a Comment