Saturday, July 2, 2011

காதலாகி கசிந்துருகி - பகுதி 10


-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 10

----------------------------------------------------------------------------------------------------------

அடுத்த இருவாரங்கள் வேகமாக உருண்டோடின. ராஜேஷ் ஓரளவு நடக்குமாறு குணமடைந்தான். அர்ஜூன் இப்போது சாதாரண படுக்கைக்கு மாற்றப்பட்டான். அவனுக்கு பாதிப்புகள் அதிகம். அவன் பிழைத்தது மிக அபூர்வம்… அது ஒரு மருத்துவ அதிசயம் என மருத்துவர்கள் சொன்னாலும், அர்ஜூனுக்கும் ராஜேஷுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது. அர்ஜூன் பிழைத்தது காதலின் வலிமையால். அவன் மீது ராஜேஷ் கொண்டிருந்த காதலின் வலிமையால்… இந்தக் காதல் தோற்பதற்காகவோ பிரிவதற்காகவோ ஏற்பட்ட காதல் அல்ல… இன்பமாக இருவர் வாழ்வதற்கு ஏற்பட்ட காதல்.

இந்த இரு வாரங்களும், ராஜேஷ் முடிந்தவரை அர்ஜூனின் அருகிலேயே இருந்தான். அவர்களுக்குள் உரையாடல்கள் மிகக் குறைவு. ஆனால் அவர்கள் விழிகளே பெரும்பாலும் பேசின.
அர்ஜூன்… என் வாழ்வில் நான் செய்த தவறால் நீ இப்போது இந்த நிலையில்… நான் ஒழுங்காக ஓட்டி இருந்தால் நீ இப்படி அடிபட்டு இருந்திருக்க மாட்டாய்… உன்னை நான் இழக்கப் பார்த்தேன்.. அதைவிட நான் இறக்கவே நினைத்தேன். ஒருவேளை உனக்கு தவறாக ஏதும் நடந்திருந்தால் அடுத்தக் கணமே என்னுயிரை நான் விட்டிருப்பேன். நீயில்லாத உலகில் வாழ்வது என்னால் இயலாத காரியம்.
ராஜேஷ் ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்ச்சியால் தத்தளித்தான். அர்ஜூனின் இந்நிலைக்குத் தானே காரணம் என திடமாக நம்பினான். தன் உள்ளம் கவர்ந்த காதலன் அர்ஜூனை இந்த நிலையில் இருத்தியதற்காக ஒவ்வொரு நொடியும் அவன் உள்ளம் அழுதது. ஆயினும் அதை அவன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
அடுத்த வாரத்தில் ராஜேஷ் நன்றாக நடக்க செய்தான். ஆனால் அர்ஜூன் இன்னும் ஒரு மாதம் படுக்கையிலேயே இருக்கும் படியாக அவன் இரு கால்களும் முறிந்திருந்தன. அவன் பாட்டி அவனை அவ்வப்போது கவனித்துக் கொண்டு வந்தாள். ஆயினும் இன்னும் இரு நாட்களில் அர்ஜூன் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் போது அவளால் ஒரு ஆடவனின் துணையுடன் தான் அர்ஜூனை கவனித்துக் கொள்ள இயலும். ராஜேஷ், தான் அர்ஜூனுடன் வந்து தங்குவதாகச் சொன்னதும் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அர்ஜூனுக்கும் தன் உயிர்க்காதலன் தன்னோடு வந்து தங்குவது சம்மதமாக இருந்தது.
அவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படும் நாள் வந்தது. ராஜேஷின் தோழன் விமல், தன் காரை எடுத்துவந்திருந்தான். அதில் அனைவரும் அர்ஜூனின் வீட்டை அடைந்தனர். விமல், ராஜேஷின் அனைத்து ரகசியங்களும் தெரிந்த ஒரு நண்பன். அது, இப்போது அர்ஜூனுக்கும் தெரிந்திருந்தது. காதலர்கள் இருவரும் அவனெதிரில் இப்போது உரிமையாக இருக்கலாம். அவன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டான்.
ராஜேஷ் அர்ஜூனின் தோள்களைப் பற்றி அவனை மெதுவாக நடக்கச் செய்து அழைத்து வந்தான். அர்ஜூனின் பாட்டி வழியிலிருந்த கோவிலில் இறங்கிக் கொண்டாள். ராஜேஷும் அவன் நண்பன் விமலும் அர்ஜூனை தாங்கி அழைத்து வந்தனர். படிக்கட்டுகள் வந்ததும், ராஜேஷ் அர்ஜூனின் காதுகளில் கிசுகிசுத்தான். அர்ஜூன் வெட்கத்தால் முகம் சிவந்தான். ராஜேஷின் இதழில் குறுநகை விளையாடியது. அவன் மெதுவாக அர்ஜூனை அப்படியே தூக்கிக் கொண்டான். இரு கைகளாலும் அவனை அள்ளி, மலர் போன்ற அவன் மேனியை தன் வலுவான கைகளால் தாங்கி அவனை அவன் அறைக்கு அழைத்துச் சென்றான். விமல், குதூகலத்தில் ஊளையிட்டான். இதனால் அர்ஜூன் மேலும் வெட்கத்தில் சிவந்தான். அவன் வெட்கும் அழகை பார்க்க மேலும் மேலும் ராஜேஷ் ஆவல் கொண்டான்.
அர்ஜூனின் படுக்கையில் அவனை ராஜேஷ் படுக்க வைத்தான். அவ்வாறு செய்யும் போது சமநிலை சற்று தவறி (அல்லது வேண்டுமென்றோ… நாம் அறியோம்… ராஜேஷுக்கே வெளிச்சம்) அர்ஜூனின் முகத்தில் தன் முகத்தை உரசினான். அவ்வாறு செய்யும் போது அவன் கன்னத்தில் இவன் இதழ்கள் உரசின. அர்ஜூன் இப்போது குங்குமச் சிவப்பாக மாறி விட்டான். நாணம் அவனை பிடுங்கித் தின்றது. விமல், மேலும் குதூகலத்தில் ஊளையிட்டான். அர்ஜூன் முகத்தை மூடிக் கொண்டான். ராஜேஷ் பொய்யாக் கோபித்துக் கொண்டு விமலை அந்த அறையை விட்டு விரட்டினான். இப்போது அந்த அறையில் ராஜேஷும் அர்ஜூனும் மட்டும்தான். அர்ஜூன் இன்னும் தன் கைகளை நீக்கி முகத்தைக் காட்டவில்லை. ராஜேஷ் மெதுவாக, மிக மெதுவாக அர்ஜூனின் அருகில் சென்று அவன் கைகளை மெதுவாக விலக்கினான். அர்ஜூன் தன் கண்களைத் திறக்க வில்லை. அவன் இதழில் குறுநகை விளையாடியது. ராஜேஷ் மெதுவாகக் குனிந்து அந்த ரோஜா இதழ்களை மெதுவாகத் தன் இதழ்களால் சீண்டி முத்தமிட்டான். அர்ஜூன் இப்போது தன் விழிகளை சற்று திறந்து ராஜேஷைப் பார்த்தான். இரு கண்களும் மற்ற இரு கண்களை நோக்கின. பார்வையாலேயே பரிவர்த்தனை நடைபெற்றது.

காதல் மீண்டும் மீண்டும் வெளிப்பட்டது. அர்ஜூனின் உடல் சிலிர்ப்பின் உச்ச கட்டத்துக்கே சென்றது. அவன் இந்த நொடிக்காக எத்துணையோ நாள் ஏங்கி இருந்தது உண்டு. இன்று அந்த தருணம் வந்து விட்டது. ராஜேஷின் இதழ்கள் இன்னும் அழுத்தமாக, மிக அழுத்தமாக பதிந்தன. அர்ஜூனின் வாய் திறந்து கொண்டது. ராஜேஷ், மெதுவாக தன் நாக்கினை உட் செலுத்தி அர்ஜூனை சுவைத்து மகிழ்ந்தான். பின் மெதுவாக விலகிக் கொண்டான். அர்ஜூனின் முகம், ஆயிரம் கோடி அகல் விளக்குகளை ஒன்றாக ஏற்றி வைத்தது போன்ற ஜோதி ஸ்வரூபமாய் காட்சியளித்தது. அவன் மூடிய இமைகளின் ஓரம் இன்பத்தின் கண்ணீர் துளிகள். அவன் தன் பிறவிப் பெரும்பயனை அடைந்து விட்டதாக இறுமாந்திருந்த நொடிப்பொழுது அது.
மெல்லத் தன் கண்களைத் திறந்து அர்ஜூன் ராஜேஷைப் பார்த்தான். அதில் காதல் பொங்கி வழிந்தது. அவன் சிரித்தான். இவனும் சிரித்தான். விமல், வெளியிலிருந்து கதவைத் தட்டினான். ராஜேஷ் இப்போது சிரித்துக் கொண்டே கதவைத் திறந்தான்.
“டேய்…. ஆடியன்ஸ் இல்லாம சினிமாவா..? உங்க ரெண்டு பேர் சினிமாவுக்கு நான் தான் சோலோ ஆடியன்ஸ்…” விமல் சொன்னான்.
அர்ஜூன் உடனே வெட்கத்தில் சிவந்தான்.
“போடா… இவனே…. உன்னால அர்ஜூன் வெட்கப் படறான் பாரு… நீ சும்மா இரு கொஞ்ச நேரம்….” ராஜேஷ் கத்தினான், பொய்யாக… அவன் உள்மனது, விமல் இன்னும் இவ்வாறு பேச வேண்டும் அதைக் கேட்டு அர்ஜூன் வெட்கப்படும் அழகைக் காண வேண்டும் என ஏங்கியது. அவன் விமலைப் பார்த்து கண்ணடித்தான்… விமலும் அந்தச் சைகையை புரிந்து கொண்டான்.
“ராஜேஷ்… ப்ளீஸ்டா… ஒரே ஒரு முறை, நீ அர்ஜூனை கிஸ் பண்ணு… நான் பாக்கணும்… அர்ஜூன் எவ்ளோ அழகா இருக்கான் தெரியுமா… நான் மட்டும் உன்ன போல கே (gay) யா இருந்தா, இப்பவே அவன என்னல்லாம் பண்ணியிருப்பேன் தெரியுமா…..” விமல் வெளுத்து வாங்கினான்.
அர்ஜூன் இப்போது நாணத்தின் அறிகுறிகள் மறைந்து கலவரத்தின் அறிகுறிகளை, கோபத்தின் அறிகுறிகளைக் காட்டினான்…
“விமல்…. திஸ் ஈஸ் டூ மச்…. ரொம்ப அதிகமா பேசாத…. என்னை என் ராஜேஷைத் தவிர வேறு யாரும் தொட முடியாது… நான் என் ராஜேஷுக்கு மட்டும் தான்…..” அர்ஜூன் கத்தினான். அவன் கோபத்தில் கத்தியதைப் பார்த்த விமல் வெலவெலத்துப் போனான்.
“சாரிடா… நான் கிண்டலுக்குச் சொன்னேன்…” விமல் குழைவாகச் சொன்னான்…
“ஆமாண்டா செல்லம்…. அவன் சும்மா ஒரு கிண்டலுக்குச் சொன்னான்.. நீ கோவிச்சுக்காத… நீ எனக்கு மட்டும் தான்… வேறு யாரும் உன்ன தொட விடமாட்டேன்…. நீ கவலைப் பாடாத….” ராஜேஷ் சொன்னான். விமலைத் தனியாக அழைத்துச் சென்று மன்னிப்பு கோரும் முகபாவத்தில் அவனை வழியனுப்பி வைத்தான். பின் அர்ஜூனை அணுகினான்.
“அர்ஜூன்…. உனக்கே தெரியும், விமல் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னான்….” ராஜேஷ் விளக்கம் கொடுத்தான்.
“இல்ல ராஜேஷ்… இதில விளையாட்டு இல்ல…. நான் உனக்கு மட்டும் தான் சொந்தமாகணும்…. வேற பேச்சுக்கே இதுல இடம் இல்ல….” அர்ஜூனின் கண்களில் கண்ணீர் துளிகள் உருண்டன.
ராஜேஷ், அர்ஜூனின் அருகில் அமர்ந்தான்… அவன் கண்கள் கண்ணீர் திரையிட்டன. அவன் மெதுவாக அர்ஜூனின் முகத்தை ஏந்தி, அவன் இதழ்களில் தன் இதழைப் பதித்தான். இம்முறை முத்தம் சற்று காதலுடன், கனிவுடன், இனிமையுடன், எல்லாம் கலந்த ஒரு பழரசமாக மாறி இனித்தது.

முத்தம்
உன்
செந்தூர இதழோரம்
சிந்தும் செந்தேனை
வந்தூர்ந்து வாய் கொள – என்
வாலிபம் தொடுக்கும்
யுத்தம்.

என்
ஆர்பரிக்கும் ஆசைகள்
அனைத்தும் ஒன்றிணைந்து
போர்புரியும் வேளையில்
எழும்பும் புதுமைச்
சத்தம்.
உன்
தளிர்மேனி அருகில் என்
குளிர்மேனி வந்த பின்னே
கொதிக்கும் என் இளமை
இரத்தம்

என்
புருவத்தில் புயலடித்து
உருவத்தில் வெடிவெடித்து
கலங்கும் என் பருவச்
சித்தம்

உன்
உலைமூச்சின் வெப்பத்தின்
அலைவந்து அடித்ததினால்
தலைக்கேறும் காதற்
பித்தம்

எனை
மீண்டும் மீண்டும் சுவைக்கத்
தூண்டும் உன் இதழ்தான்
வேண்டும் எனக்கு
நித்தம்.

என்
இச்சைகள் அனைத்தும் கூட
பிச்சையாய் கேட்டேன் உன்னை
நிச்சயம் தரவேண்டும்
மொத்தம்.

(தொடரும்)….. 
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி  radharajesh18@gmail.com.

No comments:

Post a Comment